என் காதல் கதை



அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுன்னு ஒரு லவ் ஸ்டோரி கேட்கலாம் வாங்க.

படிச்சு முடுச்சுட்டு வேலை கிடைக்காம அலையற என்ன மாதிரி பசங்களுக்கு வீட்டுல கொடுக்குற வேலை எல்லா கல்யாணத்தும் போயிட்டு வர சொல்றது. உண்மைய சொன்ன நான் வீட்ட விட்டு வந்து பத்து நாள் ஆச்சு .அஞ்சு கல்யாணம் ஒரு காது குத்து அட்டண்ட் பண்ணிருக்கேன்.அடுத்து மதுரை மாவட்டத்தில் மேலுர் பக்கத்துல கருங்காலக்குடின்னு ஒரு கிராமம் .அங்க என் அப்பாவோட பிரண்ட் பையனுக்கு கல்யாணம் அதுக்கு தான் போயிட்டு இருக்கேன் .கல்யாணத்துக்கு முதல் நாள் சாய்ந்திரம் வந்துட்டேன் .ஆட்டோ கிடைக்கல நடந்தே போய்ட்டு இருக்கேன் .கிராமம்னாலே பசுமையா தான இருக்கும் இது பாலைவனம் மாதிரி காஞ்சு கிடக்குது.குளத்துல கூட கிரிக்கெட் விளையாடிட்டு இருக்காங்க .

கல்யாண வீட்ட ஒரு கிலோமீட்டர் முன்னாடியே கண்டுபுடுச்சுட்டேன்.மைக்செட் சவுண்டு தான் காத கிழிச்சுட்டு இருக்குது."கல்யாண மாலை "யிலிருந்து "அடியேய் ராசாத்தி"என்பது வரை இளையராஜா இன்னும் இங்கு வாழ்ந்துட்டு தான் இருக்கார்.வாழைமரத்த பாத்ததுக்கும் தான் சந்தோசமா இருந்துச்சு .என்ன யாருன்னே கேக்காம வாங்க வாங்கன்னு வரவேற்று கலர் உடச்சு கொடுத்தாங்க .அப்புறம் தான் விசாரிச்சாங்க.எங்கப்பாவோட பிரண்ட் கண்ணன் என்ன கட்டிபுடுச்சுகிட்டார்.குழந்தையில பாத்ததா சொன்னாரு .அன்னைக்கு நைட் ஒரு வீட்டு மாடியில் படுக்க வச்சாங்க .தென்னை மரத்து காத்துல தனிமையில தூக்கம் .நடு ராத்தியில என் மேல ஏதோ விழ பதறி போய் நான் எழுந்து பாத்தா என்ன சுத்தி வெறும் குழந்தைங்க .அதுல ஒருத்தன் தான் கால தூக்கி போட்டுட்டான் .காலையில அஞ்சு மணிக்கு என் உடம்புல ஏதோ உரசுனா மாதிரி இருக்குன்னு எழுந்தா .அவன் அடிச்ச ஒண்ணுக்குள நான் நனைஞ்சே போயிட்டேன் .எந்திரிச்சு வேகமா குளிச்சுட்டு கல்யாணத்துக்கு கிளம்புனா .ஒரு மலைக்கோயில் மேல கல்யாணம் சொல்லி கூட்டிட்டு போனாங்க .கல்யாணம் சிறப்பாக முடிஞ்சது .


அந்த ஊர்ல ஒரு சம்பிரதாயம் இருக்கு.கல்யாண பொண்ணும் மாப்பிள்ளையும் சந்தனத்த மாறி மாறி கன்னத்தில் பூசிப்பாங்க.அப்புறம் அங்க இருக்குற முறை பையனுங்களும் பொண்ணுங்களும் விரட்டி விரட்டி பூசிக்குவாங்களாம்.கல்யாண வீடே கலகலன்னு இருந்துச்சு .நான் மட்டும் தனியா உக்காந்து வேடிக்கை பாத்துட்டு இருந்தேன் .அப்ப திடிரேன ஒரு கை என் கன்னத்துல சந்தனத்த தடவிட்டு ஓட எனக்கு ஒண்ணுமே புரியல .அப்புறம் நானும் சந்தனத்த எடுத்துட்டு அந்த பொண்ண விரட்டிட்டு ஓடுனேன்.ஒரு ரூம்ல கதவு சந்துல மறைஞ்சிருந்தா .அவள கதவோட மடக்கி சந்தனத்த பூச அவ முகத்துக்கிட்ட போனேன் .திகைச்சு போயிட்டேன் .சின்னதா கண்ணு ,அளவான புருவம்,ரோஜாப்பூ மாதிரி உதடு .நட்சத்திரத்த தூள் பண்ணி தூவுன மாதிரி முகப்பருக்கள் .என்னால அவ கன்னத்துல சந்தனத்த தடவ முடியல.அந்த அழக மறைக்க மனசு வரல .என்ன தள்ளி விட்டுட்டு ஓடி போய்ட்டா.நான் பந்தி வச்சுட்டு இருந்தேன் .அவ கல்யாண பொண்ணு கூட சாப்பிட வந்தா .அதுக்கப்புறம் நான் வேற யாருக்கும் பரிமாறவே இல்ல.அவளுக்கு மட்டும் தான்.அவ சாப்பாட சாப்பிட்டத விட கண்ணால என்ன தான் சாப்பிட்டுட்டு இருந்தா.என்ன மாதிரி பார்வைங்க அது கரண்ட் புடுச்ச மாதிரி .சும்மா உதறுது.வந்த எல்லோரும் கிளம்பிட்டு இருந்தாங்க நானும் கிளம்பித்தானே ஆகணும் .கிளம்பிட்டு இருந்தேன் .அப்ப கண்ணன் வந்து "அட எங்கப்பா கிளம்பிட்ட நீ.இன்னும் ஒரு வாரத்திற்கு மாப்பிள்ளைய அனுப்ப முடியாதுனு சொல்றாங்க.இந்த ஊர் வழக்கம் அதுவா.கல்யாணத்துக்கு வந்த பையலுக பூரா ஓடிட்டானுங்க.நீ தம்பி கூட இருந்து நம்ம ஊருக்கு வந்து விட்டுட்டு இரண்டு நாள் அங்கேயும் தங்கிட்டு தான் போகணும் .அப்பாகிட்ட நான் பேசிக்கிறேன் சரியா?"என்று கிளம்ப என்ன பேசவே விடலையே இவரு .என்ற கோபத்தில் இருந்தவனுக்கு கல்யாண பொண்ணுக்கு துணையா அவளும் இருக்கா ன்னு தெரிஞ்சதும் .அனிருத் மியூசிக்ல ஒரு குத்து போடணும்னு தோணுச்சு .

அன்னைக்கு நைட் அவுங்க குல தெய்வத்துக்கு கோயிலுக்கு ஒரு டெம்போல போயிட்டு இருந்தோம் .நிறைய பேர் இருந்தாங்க .பொண்ணு மாப்ள ஒரு பக்கமும் இன்னோரு பக்கம் நானும் அவளும் எதிர் எதிர் திசையில் இருந்தோம் .நிலா வெளிச்சம் அவள இன்னும் பிரகாசமாய் எனக்கு மட்டும் காட்டிட்டு இருந்துச்சு .அவகிட்ட மெதுவா "உன் பேர் என்ன?"என்றதும் சட்டேன மிரண்டவள் யாருக்கும் கேட்காதவாறு "திவ்யா "என்றாள் .நான் அவளிடம் கேள்வியை எதிர்பாராமல் "சிவா"என்றேன் .அவள் "தெரியும் "என்றாள் .நான் "எப்படி "என்றதும் அவள் "போன மாசம் ஒரு கல்யாணத்துல உங்கள பாத்தேன் .அப்ப அங்க சில பேர் கல்யாண மாப்பிளைய பத்தி தவறா பேசும்போது அத நீங்க ஜாலியா பேசி தப்புன்னு புரிய வச்சீங்க.உங்க கேரக்டர் ரோம்ப புடுச்சு இருந்துச்சு .அப்புறம் இங்கயும் பாத்தேனா நீங்க தனியா இருந்தீங்க அதுனால தான் சந்தனம் பூசுனேன்"என்றதும் எனக்கு புரிஞ்சு போச்சு .இவ என்ன லவ் பண்றான்னு.டெம்போ குலுங்க குலுங்க எங்களுடைய இரண்டு விரல்களும் மோத உடலில் மின்சாரம் தடையின்றி பாய்ந்தது .அடுத்த தீண்டுதல் எதிர்பாராமல் நடந்தது அல்ல.



ஒரு வாரம் செமையா போச்சு .அவளோட காதல்ல மிதந்துட்டு இருந்தேன் .வாழ்நாள் பூரா இந்த காதல்ல கரைஞ்சு கிடக்கணும்னு தோணுச்சு .மறுநாள் காலையில நான் ஊருக்கு கிழம்பி ஆகணும் .நானும் அவளும் மட்டும் தனியா மாடியில் பேசிட்டு இருந்தோம் .லேசாக காற்று வீச அவளோட முடிகள் சில என் முகத்தில் பரவ என்னமோ தெரியல ஒரு தைரியம் எனக்குள்ள வந்து அவள கட்டி புடுச்சு அவ உதட்டில் முத்தம் கொடுக்க போக அவ என்ன தள்ளி விட்டுட்டு ஓடிட்டா .சில நிமிஷத்துக்கு அப்புறம் தான் நான் எவ்வளவு பெரிய பைத்தியகாரத்தனம் பண்ணி இருக்கேனு புரிஞ்சது .அவ முகத்துல முழிக்க கூட மனசு வரல .ஊருக்கு கிளம்பிட்டு இருந்தேன் .அவ என் ரூம்குள்ள வந்தாள் நான் அவள பாக்காம கிளம்பிட்டு இருந்தேன் .அவ என்ன வேகமா திருப்பி சட்டுனு எனக்கு முத்தம் கொடுத்தா .அந்த உரசலில் ஒரு உண்மையான காதலின் வலிய புரிஞ்சுகிட்டேன் .அவ நானே விலக நினைச்சும் என் உதட்ட விட்டு பிரியால.அவ என்ன பிரிய முடியாமல் தவிப்பதை புரிஞ்சுக்கிட்டேன்.கொஞ்ச நேரத்தில் அவள சமாதானப்படுத்திட்டு கிளம்பினேன் .வந்ததும் ரோம்ப ஆர்வமா வேல தேட ஆரம்பிச்சேன் .

அடிக்கடி போய் அவள பாத்துட்டு வந்துட்டு இருந்தேன் .அந்த சமயத்துல எங்கப்பாவுக்கு பிஸினஸ்ல ரோம்ப நஷ்டம் ஆகிருச்சு .நிறைய கடன் தொல்லை வேற.அதே சமயத்துல என் அக்கா மதம் மாறி கல்யாணம் பண்ணிட்டு எங்கேயோ போயிட்டாங்க .ஊருக்குள் பெரிய பிரச்சினை.வீட்ல நிம்மதியே இல்ல.இன்னும் ஒரு தங்கச்சி இருக்கா .அவளுக்கு ஏதாவது செய்யணும் .கடன அடைக்கனும்.அதனால என் நண்பன் கூட மும்பைக்கு போக முடிவெடுத்தேன் .என்னோட கஷ்டத்தில் திவ்யா  பத்தி யோசிக்க கூட முடியல .அவளாவது சந்தோசமா வாழட்டும்னு அவகிட்ட சொல்லாமா கூட கிளம்பி ரயில்வே ஸ்டேஷன் வந்துட்டேன் .ரயில் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு அவ வந்து என்னை ஓங்கி அறைஞ்சுட்டு போய்ட்டே இருந்தாள் .அவ அடிச்சதுல தப்பே இல்ல நான் அவளோட காதலுக்கு தகுதியே இல்லாதவன்.அதுக்கப்புறம் அஞ்சு வருஷத்துக்கு நான் ஊருக்கே வரல .
என் செல்லம் மீனு குட்டியோட திருச்சி டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல அவளுக்கு பொம்மைகள் வாங்கும் போது எனக்கு எதிர கையில ஒரு குட்டி பையனோட அவள பாத்தேன் .அவளும் என்ன கவனுசிட்டா.அவகிட்ட பேசணுன்னு தோணுச்சு .அவகிட்ட போய்"எப்படி இருக்கீங்க ?"என்றதும் அவள் என்னை பார்த்து "நல்லா இருக்கேன் நீங்க ?"என்றாள் .நான் அவளிடம் "நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் .பக்கத்துல நேரு பார்க் வர முடியுமா?"என்றதும் யோசிக்காமல் சரி என்றாள் .நேரு பார்க் மீனுக்குட்டி அவ பையன் கூட விளையாடிட்டு இருந்தா.பேசணுன்னு கூட்டிட்டு வந்தேன் .ஆனா என்னால அவகிட்ட பேச முடியாம திணறிட்டு இருந்தேன் .என் நிலைமைய புரிஞ்சுகிட்டு அவளே பேச ஆரம்பிச்சா "நிறைய தாண்டி வந்தாச்சு.நமக்கான பாதைகள் வேற வேறன்னு ஆகிருச்சு .பழச நினைச்சுட்டு வாழ்றத விட புதுசா கிடச்சத அழகா ஏத்துக்க பழகிக்கணும்.அன்னைக்கு ஏதோ கோபத்தில் அடிச்சிட்டேன்.மன்னிச்சிருங்க "என்றதும் நான் அவளிடம் "நீ கன்னத்தில் மட்டும் தான் அடிச்ச நான் உன் நம்பிக்கைய அடிச்சிட்டேன்.அந்த வலி உன்னவிட்டு போக இந்த ஜெண்மம் பத்தாது "என்றேன் .இருவருக்கும் கிடையே மெளன போராட்டம் நடக்க அவள் கிளம்ப தயார் ஆனாள்




அப்போது அவள் பையன் வந்து"ஆன்டி ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரம் விளையாடிட்டு வர்றேன் ப்ளீஸ் "என்று கெஞ்சி கொண்டிருக்கையில் தான் அவள் நன்றாக கவனித்தேன் .அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று அடுத்த நிமிடம் மீனுக்குட்டி வந்து"மாமா .போகும்போது சாக்லேட் வாங்கி கொடு.அம்மாகிட்ட போய் சொல்ல கூடாது சரியா?"என்று சொல்லியபடியே கன்னத்தில் முத்தம் இட்டு விட்டு ஓடினாள்.அவளும் என்னையே கவனித்து கொண்டு இருந்தாள் .இருவருக்குள்ளும் இருந்த மாய திரை விலகியது.இருவரின் கண்ணிலும் கண்ணீர் அருவியாய் பெருகி வழிந்து கொண்டு இருந்தது .

(
இப்ப இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி பவித்ரான்னு குட்டி பாப்பா இருக்கு)

No comments:

Post a Comment